Wednesday, May 16, 2007

தலித் தலைமை ஆசிரியை அலுவலகத்தை பசு மூத்திரம் கொண்டு சுத்தம் (?) செய்த ஆதிக்க சாதி ஆணவம்

தேசத்தின் உழைக்கும் மக்களை சுரண்டிக் கொழுத்த கும்பல் ஒவ்வொரு நொடியும் தனது ஆதிக்கசாதி ஆணவத்தை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறது.
கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிய டெம்பர்கர் அவ்விடத்தை விட்டு பணிமாறுதல் பெற்றார். அவரைத் தொடர்ந்து புதிய தலைமையாசிரியையாக கிராமப் பள்ளிக் கூடத்தில் நியமிக்கப்பட்ட தலைமை யாசிரியை தனது பணியில் அமர்த்து வதற்கு முன்பாக செய்த செயல் சாதிய ஆணவத்தின் உச்சத்தை எடுத்துக்காட்டு வதாகவும், மனிதகுல ஆர்வலர்களின் நரம்புகளை புடைக்கச் செய்யும் விதமாகவும் இருந்தது.
மகராஷ்ட்ரா மாநிலத்தின் பாந்த்ரா பகுதிக்கு 9 கிலோ மீட்டர் தூரத்தில் சுரெவடா என்ற கிராமத்தில் உள்ள ஜில்லா பரிஷத் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக டெம்புர்கர் பணியாற்றி வந்தார். இந்தப் பள்ளிக் கூடத்தில் 210 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 20 மாணவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் கள்.
திலோத்தமா டெம்புர்கர் தலைமை ஆசிரியையாக இருந்தவரை அவருடன் பணி யாற்றிய ஆதிக்க சாதி ஆசிரியைகள் அவரை வெறுத்து ஒதுக்கினர். அங்கு படித்த ஆதிக்க சாதி மாணவர்களும் அவரை வெறுத்து ஒதுக்கினர்.
தலைமை ஆசிரியை டெம்புர்கர் வேலை மாற்றல் வாங்கி அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஷரத் கைட்டடே என்பவரிடம் இம்மாத துவக்கத்தில் வழங்கினார். புதிய தலைமை ஆசிரியராக அவர் பொறுப்பேற்ற உடன் செய்த காரியம் என்ன தெரியுமா? பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
மாதவி ரவுட் என்ற ஆசிரியை மூலம் சிறப்பு பூஜை புனஸ்காரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆதிக்க சாதியினர் மிகப் புனிதமாகக் கருதும்(!) பசு மூத்திரம் வகுப்பறைகளிலும் பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைகளிலும் தெளிக்கப்பட்டன.
பள்ளி இறுதித் தேர்வுகள் துவங்கும் முன்பு வகுப்புகளில் புனித நீர்(?) தெளிக்கப் பட்டது.
பூஜை செய்து கொண்டே ஆசிரியை ரவுட் தலித் மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தார் தலித் மாணவர்கள் அனைவரும் இடத்தை விட்டு எழும்புமாறு கோரப்பட்டனர். அவர்களுக்கும் பசு மூத்திரம் தெளிக்கப்பட்டது. அவர்கள் தூய்மையாக்கப்பட்டனர்(!)
பசு மூத்திரத்தால் தூய்மைப்படுத்தும் தகவல் நாடெங்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
பள்ளிக்கூட நிர்வாகம் துறை சார்ந்த நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. காவல் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் ஆதிக்க சாதி தலைமை ஆசிரியர் மாட்டியிருக்கிறார்.
சமூக அவலங்களின் தலைமைப் பீடமான ஆதிக்க சாதியினர் தங்களைத் தூய்மைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு உழைக்கும் மக்களை தலித் சமூகத் தினரை அவமானப்படுத்தியுள்ளனர்.
பசு மூத்திரத்துக்கு வழங்கும் மரியாதையைக் கூட மனிதர்களுக்கு வழங்க மறுக்கும் இந்த ஆணவக் கூட்டத்தை எதை தெளித்து சுத்தப்படுத்துவது?

No comments: